வளர்ச்சியின் வெற்றி (கதை - '௬')6
வளர்ச்சியின் வெற்றி
ஒரு காட்டின் கதை - '௬'
ஒரு காட்டின் கதை - '௬'
சிங்கங்கள் எல்லாம் மான்களை வேட்டையாடி ஆடிப் பணமாய் மாற்றிச் சேர்த்தன. புலிகளுக்கும், சிங்கங்களுக்கும் வேட்டையாடும் நிலப்பரப்பில் கடுமையான வன்மை ஏற்பட்டு அடிக்கடி ஒன்றொடொன்று போர் புரிந்தன. யானைகள் எப்பொழுதும் சங்கிலிகளுடன் காட்டில் மரங்களைச் சாய்த்து இழுத்து வந்து கொண்டிருந்தன. மான்களும், மாடுகளும், வரிக்குதிரைகளும் தங்கள் பாதுகாப்பிற்கென ஓநாய்களுக்குச் சம்பளம் கொடுத்துக் காவலாளிகளாக்கின. அவை தம் இனத்தைப் பாதுகாப்பதற்குப் பணம் தேவையென்பதால் பால் பண்ணை வைத்து மனிதனிடம் அதைக் காசாக்கின. அவற்றின் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாத சவலைக்குழந்தைகளானாலும், உயிரோடும் பாதுகாப்போடும் இருக்க முடிந்ததை நினைத்து மகிழ்ந்தன. பழம் தூக்கித் தூக்கி முதுகு வளைந்து விட்ட குரங்குகள் தாங்கள் பறித்த பழங்கள் விலை அதிகமானதால், மரத்தின் வேர்களில் உள்ள கிழங்குகளைச் சாப்பிட்டு வாழப் பழகி விட்டன.
புத்திசாலித்தனமும், தந்திரமும் நிறைந்த குள்ளநரிகள் எல்லாம், யானைகளுக்குப் புண்ணுக்கு மருந்து தரும் மருத்துவர் தொழில், மீன்கொத்திகளுக்கும், நாரைகளுக்கும் மீன்பிடிக்கக் கற்றுத் தரும் பள்ளி- கல்லூரி நடத்துதல், மான்களுக்கும், மாடுகளுக்கும் ஆயுள் காப்பீடு, சிங்கம், புலிகளுக்கு ஆலோசகர் தொழில் போன்ற நூதனமான, யாரும் நுழைய முடியாத தொழில்கள் அமைத்து நிறையப் பணம் சேர்த்தன. அழகிய மயில்கள், விளம்பரங்களில் நடிப்பதும், மனிதர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதுமாகத் தங்கள் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தன.
Comments
Post a Comment